Saturday, September 3, 2016

குன்றக்குடி சமணர் படுகைகள் - பிராமி கல்வெட்டு

செட்டிநாட்டுப்பகுதியின் நடுநாயகமான குன்றக்குடி மலை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட மரபு உடையது. இச்சிறுகுன்றில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிராமி கல்வெட்டு உள்ளது. சமணர் படுக்கைகள் உள்ளன. இன்றைய யானைகட்டி மண்டபத்தின் வலப்பக்கமுள்ள வாயிலில் நுழைந்தால் ஒன்பது, பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த மூன்று குடவறைச் சிவன் கோவில்கலைக்காணலாம். இவை தொல்லியல் துறை மேற்பார்வையில் இருக்கின்றன. மாமல்லபுரத்துச் சிற்பங்களையொத்த சிற்பங்கள் உள்ளன. பிள்ளையார்பட்டி விநாயகரைப்போன்ற ஆனால் சிறிய திருவுரு உள்ள வலம்புரி விநாயகர் புடைப்புச் சிற்பம் உள்ளது. தலையில் மூன்று சிவலிங்கங்களைத் தாங்கியுள்ள அரிய சிற்பம் அதுவாகும். சோழர்கள் கால, பிற்கால பாண்டியர் காலக் கல்வெட்டுக்கள் ஏராளமாக உள்ளன. இவற்றையெல்லாம் பார்த்து ஜெர்மனியிலிருந்து வந்திருந்த இனிய நண்பர் திருமிகு சுபாஷிணி அவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சிறப்பாக மின்தமிழ் குழுமத்தில் பதிவிட்டிருந்தார்.(http://www.tamilheritage.org/thfcms/index.php/2008-12-05-21-27-39/2012-04-07-07-12-08/2012-04-12-18-54-24 www.tamilheritage.org › ... › )

ஏற்கனவே குடவறைக்கோயில்களை பார்த்திருந்த நான் பக்கத்திலிருந்தும் பிராமி கல்வெட்டினைப் பார்க்கவில்லையே என்று எண்ணியிருந்தேன்.
நண்பர்களிடம் விசாரித்தபோது அவர்கள் குடவறைக்கோயிகளையே பார்க்கவில்லையென்பது தெரியவந்தது.
 
சென்ற மாதம் தருமைக்குருமணி மேல்நிலைப்பள்ளியில் உரைநிகழ்த்தச்சென்றிருந்தபோது அன்று மாலை குன்றக்குடி மலையின் மேற்குப் பகுதியிலுள்ள ஞானியார் மலை என்று அழைக்கப்படுகிற சமணர் படுக்கையுள்ள பகுதிகளைச் சென்றுபார்த்துவந்தேன். 
பொய்கை வழியாகவும் அல்லது பேருந்து நிறுத்தத்திற்கு எதிரே உள்ள பாதை வழியாகவும் எளிதாகப் பாறைகள் உள்ள மலையின் மேற்குச் சரிவுப்பகுதிக்குச் செல்லலாம். கல்லில் வெட்டப்பட்டுள்ள குளம்,  பிற்காலத்திய சிறிய பிள்ளையார்கோவில், பைரவர், அனுமார், முனிவர் சிலைகள் உள்ளன. குகை போன்ற பகுதியில் ஒரு புறத்தில் சமணர் பள்ளியின் ஐந்து கல்படுக்கைகளும் மறுபகுதியில் மூன்று படுக்கைகளும் உள்ளன. முகப்பில் பிராமி கல்வெட்டு இருக்கிறது. அது சமண முனிவர்களுக்கான படுக்கைகளை அமைத்தவர் பெயராக இருக்கும் என்று குறிப்பிடுகிறார்கள். “சாத்தன் ஆதன்” என்ற பெயர் வித்தியாசமான முறையில் பொறிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.

தனிமையில் அந்தப்பகுதியில் நிற்கும்போது சொல்லமுடியாத மனம்நிறைந்த உணர்வு மேலோங்குகிறது. படங்கள் பகிர்ந்துள்ளேன். நண்பர்கள் குன்னக்குடியான் அருள்பெறுவதோடு வாய்ப்பேற்படுத்திக்கொண்டு குன்றக்குடியிலுள்ள அரிய குடவறைக்கோயில்களையும் சமணப்படுக்கையுள்ள ஞானியார்மலைப்பகுதியையும் பிள்ளைகளுடன் காணவேண்டுகிறேன். தனி அனுபவமாக அது அமையுமென்பது உறுதி.   

நன்றி : சொ.வினைதீர்த்தான்
https://groups.google.com/forum/#!topic/vallamai/M6agAwQo_Io










No comments:

Post a Comment